மதுரைக்காஞ்சி - மூலம்

                                            மதுரைக்காஞ்சிமூலம்


ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து

வலம் மாதிரத்தான் வளி கொட்ப                    5

 

வியல் நாள்மீன் நெறி ஒழுகப்
பகல் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்        10

 

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோய்  இகந்து நோக்கு விளங்க
மேதக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு                       15


கண்டு தண்டாக் கட்கு இன்பத்து
உண்டு தண்டா மிகுவளத்தான்
உயர் பூரிம விழுத் தெருவில்
பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நல்மாந்தரொடு                    20


நல் ஊழி அடிப் படரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!

பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர்                 25

இணை ஒலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி                        30

சினத் தீயின் பெயர்பு பொங்கத்
தெறல் அருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு                             35

நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர
அமர் கடக்கும் வியன் தானைத்
தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின்           40

தொல்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந

விழுச் சூழிய விளங்கு ஓடைய
கடுஞ் சினத்த கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய                     45

 

வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களன் உழக்கவும்
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும்                50

வாம் பரிய கடுந்திண்தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்             55

பொருது அவரைச் செரு வென்றும்
இலங்கு அருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்
நிலந் தந்த பேர் உதவிப்                          60

பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்

மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை
அருங்குழு மிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்                 65

 

நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயில் அருப்பம்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வட பெருங்கல்                       70

குண குட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர் தம் கோன் ஆகுவை
வான் இயைந்த இருமுந்நீர்ப்                      75

பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங்காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை எடுத்து
இன் இசைய முரச முழங்கப்                     80

பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கைத்               85

தெண் கடல் குண்டு அகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ

நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பும் சை ற்றத்                      90

தோடு வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெள்மணி
இரும் புள் ப்பும் இசையே என்றும்              95


மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப
ஒருசார், விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு
உரு கெழு பெருஞ்சிறப்பின் . . . .                 100

இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்
பொலந்தாமரைப் பூச் சூட்டியும்
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே!                     105

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை . . .             110

புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக்கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்                  115

நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்உப்புப் பகர்நரொடு
ஒலி ஓவாக் கலியாணர்
முது வெள்ளிலை மீக் கூறும்
வியல் மேவல் விழுச் செல்வத்து . . . .           120

இரு வகையான் இசை சான்ற
சிறு குடிப் பெருந் தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்
கால் என்னக் கடிது உராஅய்                      125


நாடு கெட எரிபரப்பி
ஆலங்கானத் அஞ்சுவர இறுத்து
அரசு பட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடுதிறல் உயர் புகழ் வேந்தே . . . .              130

நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்                 135


இலங்கு வளை இருஞ்சேரிக்
கட் கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப் பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின் . . .    140

கோழ் ஊஉன் குறைக் கொழுவல்சிப்
புலவு வில் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி இருப்பின்
தென் பரதவர் போர் ஏறே
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு            145


உரிய எல்லாம் ஓம்பாது வீசி
நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டு பல கழிய வேண்டுபுலத்து இறுத்து . . .   150

மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்

உறு செறுநர் புலம் புக்கு அவர்
கடி காவின் நிலை தொலைச்சி
இழிபு அறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய                       155


நாடு எனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம்சீர்த் தழூஉ மறப்ப                 160

அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின்                 165


அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக் . . .           170

கழுநீர் பொலிந்த கண்அகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர
நல் ஏர் நடந்த நசைசால் விளைவயல்
பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழிதவக் கெட்டுப்                 175

பாழாயின நின் பகைவர் தேஎம்

எழாஅத் தோள் இமிழ் முழக்கின்
மாஅத்தாள் உயர்மருப்பின்
கடுஞ்சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் தானையொடு . . .             180

முருகு உறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழப்
பெயல் உறழக் கணை சிதறிப்
பல புரவி நீறு உகைப்ப
வளை நரல வயிர் ஆர்ப்பப்                       185


பீடு அழியக் கடந்து அட்டு அவர்
நாடு அழிய எயில் வெளவிச்
சுற்றமொடு தூ அறுத்தலின்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி . . .     190

அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின்          195


தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்

உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் . . .       200

பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
 
பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே          205

அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇயர் நின் சேண்விளங்கு நல் இசை

தவாப் பெருக்கத்து அறா யாணர் . . . .            210

அழித்து ஆனாக் கொழுந்து இற்றி
இழித்து ஆனாப் பல சொன்றி
உண்டு ஆனாக் கூர் நறவின்
தின்று ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஓண்பல் வெறுக்கைப்          215


பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர்
நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறு பல தரீஇக்
கலந்தோ ருவப்ப எயில் பல கடைஇ . . .         220


மறம் கலங்கத் தலைச் சென்று
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறிச்
சூடுற்ற சுடர்ப் பூவின்                            225


பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக்
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு
பணிந்தோர் தேஎம் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார் . .  230

பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படுகண் முரசங் காலை இயம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத்து இறுத்த
பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் சுனை இரு முந்நீர்த்       235


திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே

அதனால், குணகடல் கொண்டு குடகடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இட ன் அறியாது
அவலும்  மிசையும் நீர்த் திரள்பு ஈண்டிக் . . .      240

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரல் களிற்றின நடுங்க
வரைமுதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலின் தாங்காது
குணகடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி      245

நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றிக்
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முட் தாள் சுடர்த் தாமரை
கள்  கமழும்  நறு நெய்தல் . . . .                250

வள் இதழ் அவிழ் நீலம்
மெல் இலை அரி ஆம்பலொடு
வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்

கம்புள் சேவல் இன்துயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து                   255


கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பின் எந்திரங் கட்பின் ஓதை
அள்ளல் தங்கிய பகடுஉறு விழும்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே . . .          260

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை இன்குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்
தைந்த கோதை தாரொடு பொலியப்              265


புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார்ச் . .    270

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி           275

மடக்கண் பிணையொடு மறுகுவன உகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழல்

பாஅ யன்ன பாறை அணிந்து
நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து . . .             280

சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமருள் நெய்தல் உறழக் காமர்
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்          285

 

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டித் . . .      290

தினைவிளை சாரல் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல்                    295

கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும் பூக் கொய்யும் பூசல் இருங் கேழ்
ஏறு அடு  வயப்புலிப் பூசலொடு அனைத்தும்
இலங்குவெள் அருவியொடு சிலம்பகத்து இரட்டக்
கருங்கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து . . .   300

அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்

இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயம் தொட்டன்ன
கண்விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து    305


அருவி ஆன்ற அணிஇல் மாமலை
வை கண்டன்ன புல் முளி அம் காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரகம் முகந்து
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை
இலைவேய் குரம்பை உழை அதட் பள்ளி . . .     310


உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்துப்
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார்

முழங்குகடல் தந்த விளங்கு கதிர் முத்தம்        315

 

அரம்போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்புப்
பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல் . . .    320

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்று ஆங்கு        325


ஐம்பால் திணையுங் கவினி அமைவர
முழவு இமிழும் அகல் ஆங்கண்
விழவு நின்ற வியல் மறுகின்
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி
இன் கலியாணர்க் குழூஉப்பல பயின்று ஆங்குப் . . 330

பாடல் சான்ற நல்நாட்டு நடுவண்

கலை தாய உயர் சிமையத்து
மயில் அகவும் மலி பொங்கர்
மந்தி ஆட மாவிசும்பு உகந்து
முழங்குகால் பொருத மரம் பயில் காவின்        335

 

இயங்கு புனல் கொழித்த வெண்டலைக் குவவு மணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறும்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்
அவிர் அறல் வையைத் துறைதுறை தோறும் . .   340

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்

நிலனும் வளனுங் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந்திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்              345


கொழும்பல் புதிய குடி இழந்தனரும்
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழியப்
பன்மாறு ஓட்டிப் பெயர்புறம்பெற்று . . .           350

மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசைத்

தொல் வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு       355


வையை அன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வானம் மூழ்கி
சில் காற்று இசைக்கும் பல் புழை நல்இல்
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
பல்வேறு குழாஅத்து இசையெழுந்து ஒலிப்ப . . .  360

மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவலக்
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடுங் கலிகொள் சும்மை
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்துச்           365


சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள
நாள் தோறு எடுத்த நலம்பெறு புனை கொடி
நீர் ஒலித்தன்ன நிலவுவேல் தானையொடு .
புலவுப்படக் கொன்று மிடை தோல் ஓட்டிப் . . .    370

புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி
கள்ளின் களி நவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்கப்

னைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்        375


வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூக்
கூம்பு முதல் முருங்க எற்றிக் காய்ந்து உடன்
கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணிலம் ஆர்ப்பச் சினம் சிறந்து       380

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்தொடர் பேணாது காழ்   சாய்த்துக்
கந்து நீத்து உழிதரும்  கடாஅ யானையும்
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும்     385


செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய . . . .           390

கொடிபடு சுவல டுமயிர்ப் புரவியும்
வேழத்து அன்ன வெருவரு செலவின்
கள் ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்

தீம் புழல் வல்சிக் கழற் கால் மழவர்             395

 

பூந்தலை முழவின் நோன்தலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர்
பல வகை விரித்த எதிர் பூங்கோதையர்
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்
தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய் . . .   400

நீடுகொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்
இருதலை வந்த பகை முனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்து உயிர்த்து
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றைப்
பல் வேறு பண்ணியந் தழீஇத் திரி விலைஞர்      405

மலை புரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர

இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால்நரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொல் முதுபெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை . . .         410

 

செல் சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று
வார்ந்த வாயர் வணங்கு இறைப்பணைத் தோள்
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை          415

தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை
மை உக்கன்ன மொய் இருங் கூந்தல்
மயில் இயலோரும் மட மொழியோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப . . .        420

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக
 

மழை கொளக் குறையாது புனல் புக மிகாது
கரை பொருது இரங்கும் முந்நீர் போலக்           425


கொளக் கொளக் குறையாது தரத் தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின்நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங் காடி நனந்தலைக் கம்பலை . . .           430

        செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவிற்
       கண் பொருபு உகூஉம் ஒண் பூங்கலிங்கம்
       பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
       திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானைக்            435


கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங்கோதை
அணி கிளர் மார்பின் ஆ ரமொடு அளைஇக்
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇக்           440

காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்

நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு

தெள் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல்
தா அற விளங்கிய வாய்பொன் அவிர் இழை      445


அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ
ஒண் குழை திகழும் ஒளிகெழு திருமுகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண்கடல் திரையின் அசைவளி புடைப்ப . . .     450

நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்
மழைமாய் மதியின் தோன்றுபு மறைய

நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக             455


மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்கத் . . .             460

திண்கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித்
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்                 465


பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி. . .          470


உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்          475


பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .            480


ஆன்று அடங்கு  அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்கு வரக்
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து           485


நோக்குவிசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி
இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையுங்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து . .       490


ஞெமன் கோலன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்

நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல           495


நன்றும்  தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி . . .         500


குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பன்மாண் நல்இல்
பல்வேறு பண்டமொடு ஊண்மலிந்து கவினி
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு   505


சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மழை ஒழுக்கு அறாப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றியன்ன
தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும்       510

கோடு போழ் கடைநரும் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மாக்களும்
                 515


எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண்பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்துச்        520

சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினும் கால் உற நிற்றரக்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை

பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ           525


விழைவு கொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வேறு உருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி        530


மென்பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்

கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயின் நுகர                535


        வால் இதை எடுத்த வளிதரு வங்கம்
       பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
       ஒல்லென் இமிழிசை மானக் கல்லென
       நனந்தலை வினைஞர் கலம் கொண்டு மறுகப்
       பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை ஓதம்        540

       இருங்கழி மருவிப் பாயப் பெரிது எழுந்து
       உருகெழு பானாள் வருவன பெயர்தலின்
       பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே

அல் அங்காடி அழிதரு கம்பலை
ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினம் தணிந்து   545


சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதல் குன்றம் சேரக் குணமுதல்
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு
பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர்
காதல் இன்துணை புணர்மார் ஆய் இதழ்த் . . .     550

தண் நறுங் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ
நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைய
நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென் நூல் கலிங்கம் கமழ்புகை மடுப்பப்
பெண் மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர்          555

நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க
நாணுக்கொள
ஏழ் புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து . .560

       வீழ்துணை தழீஇ வியல் விசும்பு கமழ

நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு
ஆய் கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போது அவிழ் புதுமலர் தெரு உடன் கமழ
மேதகு தகைய மிகுநலம் எய்திப்                 565


பெரும் பல்குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து

நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப்பொய் பல கூட்டிக் கவவுக்கரந்து            570


சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம் தப வாங்கி
நுண் தாது உண்டு வறும் பூத் துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து                575

பழம் தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல்இல்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி . . .    580

நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப்           585


பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென் தளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயரக்
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்         590

மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறாது உற்ற வடுப்படு நெற்றிச்                  595


சுரும்பார் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம் பரல் உறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதரக்
கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து . . .           600

பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊறப்
புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி           605

நுண்ணீர் ஆகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நல்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூல் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோள் சாலினி மடுப்ப  ஒருசார். . .         610

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ                 
அரிக்கூட் இன் இயம் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை சேரி தொறும்        615

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் . . .            620

பணிலங் கலி அவிந்து அடங்கக் காழ் சாய்த்து
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள் இழை மகளிர் பள்ளி அயர
நல்வரி இறாஅல் புரையு மெல் அடை
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்          625

கவவொடு பிடித்த வகையமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க
விழவின் ஆடும் வயிரியர் மடியப்
பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப்          630

பானாட் கொண்ட கங்குல் இடையது

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய்கோல்
கூற்றக் கொல்தேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும்  மரனும் துணிக்குங் கூர்மைத்            635


தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென் நூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்             640

நிலன் அகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த         645

நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர்காப்பாளர் ஊக்க அருங்கணையினர்
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்
அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் . . .  650

கடவுள் வழங்கும் கையாறு கங்குலும்
அச்சம் அறியா ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்

போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு             655

 

ஓதல் அந்தணர் வேதம் பாடச்
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்டப் . . .  660

பல்வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்பக்
கள்ளோர் களி நொடை  நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சிப்
புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பிக்
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய       665

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்இல் கதவங் கரைய

உண்டு மகிழ் தட்ட மழலை நாவிற்

பழஞ்செருக்காளர் தழங்கு குரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல . . . .                670

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப்              675


பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டு உறை வயமாப் புலியொடு குழும
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்தனையராகி நறவு மகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த . . .           680

பரூஉக்காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவும்
தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப
மென் பூஞ்செம்மலொடு நன்கலம் சீப்ப            685


இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறை

மைபடு பெருந்தோள் மழவர் ஓட்டி
இடைப்புலத்து ஒழிந்த ஏந்துகோட்டு யானை
பகைப்புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி
வேல் கோல் ஆக ஆள் செல நூறிக் . . .          690


காய் சின முன்பின் கடுங் கட்கூளியர்
ஊர்சுடு விளக்கின் தந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாள் தர வந்த விழுக்கலம் அனைத்தும்           695

கங்கை அம் பேரியாறு கடற் படர்ந்தாங்கு
அளந்து கடை அறியா வளங்கெழு தாரமொடு
புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ            700

ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில்
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து            705


மயில் ஓரன்ன சாயல் மாவின்
தளிர் ஏர் அன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுட் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத்    710

தாதுபடு பெரும்போது புரையும் வாள்முகத்து
ஆய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து

திண் காழ் ஆரம் நீவிக் கதிர்விடும்                715


ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்             
வரிக் கடைப்பிரசம் மூசுவன மொய்ப்ப
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந்தெரியல்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் . .    720


சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
வருபுனல் கற்சிறை கடுப்ப இடையறுத்து          725


ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
வாள்வலம் புணர்ந்த நின் தாள்வலம் வாழ்த்த

வில்லைக் கவைஇக் கணை தாங்கு மார்பின்
மா தாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின்     730

நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவு இல் கறங்க
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்
பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய            735


விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டிக்
காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கிப்
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து        740

வானத்து அன்ன வள நகர் பொற்ப
நோன் குறட்டு அன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந்தெரியல்             745


பெருஞ்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என
வரையா வாயில் செறாஅது இருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என . . .     750


இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்
களந் தோறும் கள் அரிப்ப
மரம் தோறும் மை வீழ்ப்ப
நிண ஊன் சுட் டு உருக்கு அமைய               755


நெய் கனிந்து வறை ஆர்ப்பக்
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய . . . .               760

தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி           765

அரிய தந்து குடி அகற்றிப்
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப் . . . 770

பொய்யா நல்லிசை நிறுத்த புனை தார்ப்
பெரும் பெயர் மாறன் தலைவனாகக்
கடந்து அடு வாய் வாள் இளம்பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த              775


மறமிகு சிறப்பிற் குறுநில மன்னர்
அவரும் பிறகும் துவன்றிப்
பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் . . .          780

மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே.

Comments

Popular posts from this blog

மதுரைக்காஞ்சி - அறிமுகம்

மதுரைக்காஞ்சி - பொருட்சுருக்கம்